கோலாலம்பூர், டிசம்பர் 26 – தலைநகர், கோத்தா டமான்சாராவிலுள்ள, “கார் பூத்” விற்பனை தளத்தில், காரில் உப்பிய நிலையில் இறந்து கிடக்க காணப்பட்ட ஆடவர், தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட காரில், புகைந்த கரித் துண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதோடு, 40 வயது மதிக்கத்தக்க அந்த உள்நாட்டு ஆடவர், இறந்து ஐந்து நாட்களுக்கும் மேலாகி இருக்கலாம் என நம்பப்படுவதாக, பெட்டாலிங் ஜெயா துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் எம். ஹுசைன் சொலெயுடின் சொல்கிப்ளி தெரிவித்தார்.
நேற்று நண்பகல் மணி 12.04 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில், கோத்தா டமான்சாரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
விற்பனை தளத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பெரோடுவா பெஸ்ஸா ரக காரிலிருந்து அவ்வாடவரின் உப்பிய உடல் மீட்கப்பட்டது.
முன்னதாக, சம்பந்தப்பட்ட விற்பனை தளத்தில், காரில் இறந்த நிலையில் காணப்பட்ட ஆடவரின் சடலத்துடன் குறிப்பு ஒன்றும் இருந்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.