ஜோர்ஜ் டவுன், ஜன 4 – பினாங்கில் 2008 ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக வாங்கக்கூடிய விலையில் 154,685 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாங்கக்கூடிய 50,700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 20,249 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 83,736 வீடுகள் இன்னும் திட்டத்தில் அல்லது அங்கீகார நிலையில் இருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுப்புறத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ S. சுந்தரராஜு தெரிவித்தார். பினாங்கில் வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால் அனைத்து மேம்பாட்டாளர்களும் தொடர்ந்து இத்தகைய வீடுகளை நிர்மாணிக்கும்படி தாம் கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
மேலும் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை சொந்த வீட்டுடைமைக்கான மூன்றாது கட்ட பிரச்சாரத்தை மாநில அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். சொத்துடமையை துரிதப்படுத்துவதோடு பினாங்கு மக்கள் சொந்த வீடுகளை பெறுவதை உதவும் நோக்கத்தில் 2020ஆம் ஆண்டு முதல் இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவதாக சுந்தரராஜு விவரித்தார்.