ஷா அலாம், பிப் 23 – அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவதாக இருந்தால் PAS மற்றும் Perikatan Nasional (PN) மேற்கொண்டுவரும் முயற்சிகளை அலட்சியப்படுத்திவிட வேண்டாம் என மந்திரிபெசார் Amirudin Shari தலைமையிலான சிலாங்கூர் ஒற்றுமை அரசாங்கத்திற்கு PKR மத்திய செயற்குழு உறுப்பினர் Yahya Mat Sahri நினைவுறுத்தியுள்ளார். சிலாங்கூரில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள், வாக்காளர்களை பாதிக்கக்கூடிய எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் எதிர்க்கட்சியின் முயற்சிகளை சீர்குலைக்க ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கிடையே தேர்தலுக்கு முன் ஒற்றுமையை வளர்க்க ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேச்சு நடத்த வேண்டும். ஒத்துழைப்பின் இணக்கத்தன்மை மாநிலம், நாடாளுமன்றம் , சட்டமன்றம் மற்றும் கிராமத்தின் தலைமையிலிருந்து தொடங்க வேண்டும் என என அவர் கேட்டுக்கொண்டார். இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், நிச்சயமாக அது சிலாங்கூரைப் பாதுகாக்க ஒற்றுமை அரசாங்கத்திற்கு வலுவான பலத்தை அளிக்கும் என்று Yahya Mat Sahri சுட்டிக்காட்டினார். கடந்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றத்தில் பாஸ் – பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி 22 தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 56 இடங்களில் 34 இடங்களைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொண்டது.