சிபு, ஜன 31 – போலி கிரிப்டோகரன்சி (Cryptocurrency) முதலீட்டு திட்டத்தில் தாம் முதலீடு செய்த 94,247 ரிங்கிட்டை கார் இயந்திர எண்ணெய் விற்பனையாளர் ஒருவர் இழந்தார். பணத்தை இழந்த 47 வயதுடைய அந்த ஆடவரிடமிருந்து புகார் பெற்றுள்ளதாக சிபு OCPD துணை கமிஷனர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார். முகநூலில் வெளியான முதலீடு வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தினால் கவரப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டிருந்த செயலியை தட்டியவுடன் டேவிட் என்ற நபர் நடத்திவந்த வாட்ஸ்அப் குழுமத்தில் இணைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தமது புகாரில் தெரிவித்தார்.
கிரிப்டோ பங்குகள் குறித்து அந்த நபர் கூறிய தகவல்களை நம்பி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை 94,247 ரிங்கிட்டை ஐந்து வங்கிகளில் தாம் பட்டுவாடா செய்ததாகவும், பிறகு தமது வங்கிக் கணக்கில் ஆதாயம் அனைத்தும் சேர்ந்து ஏழு லட்சம் அமெரிக்க டாலருக்கும் மேல் இருந்தது குறித்து அந்நபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எனினும் அந்த தொகையை மீட்க முயன்றபோது அது முடியாமல் போன பிறகே தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து அந்நபர் போலீசில் புகார் செய்ததாக சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.