கோலாலம்பூர், டிசம்பர் 7 – கல்வியாளர் அல்லாதவர்களை தேர்வு மேற்பார்வையாளர்களாக நியமிப்பது, நடப்பிலுள்ள விதிமுறைகள், SOP – நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டதாகும்.
நாட்டின் பொது தேர்வுகளின் நிர்வாகம் மற்றும் வழிநடத்தலில் உயர்நெறிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிச் செய்ய அது அவசியம்.
அதோடு, அவ்வாறு நியமிக்கப்படும் தேர்வு மேற்பார்வையாளர்கள், தேர்வு நடைபெறும் காலம் நெடுகிலும், ஆசிரியர்கள் மத்தியில் தேர்வுச் செய்யப்படும் அனுபவம் வாய்ந்த கண்காணிப்பாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
அவர்களின் உயர்நெறி மற்றும் நிபுணத்துவம் மீதான உத்தரவாத்தை உறுதிச் செய்ய, 1972ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ இரகசிய சட்ட பாரத்திலும், குற்றசெயல் மற்றும் போதைப் பொருள் விடுப்பு உத்தரவாத பாரத்திலும் அவர்கள் கையெழுத்திட வேண்டுமென, கல்வி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் மேலவையில் இன்று தெரிவித்தார்.
கல்வியாளர் அல்லாதவர்களை தேர்வு மேற்பார்வையாளர்களாக நியமிப்பது தொடர்பிலும், அவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் கட்டொழுங்கு, நிபுணத்துவம் மற்றும் உயர்நெறி ஆகியவை எவ்வாறு உறுதிச் செய்யப்படுகிறது எனவும், செனட்டர் டத்தோ கேசவதாஸ் அச்சுதன் முன் வைத்த கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.