புதுடெல்லி, டிசம்பர் 24 – கடந்த நான்கு வாரங்களில், உலகளவில், புதிய கோவிட்-19 பெருந்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை, 52 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, WHO – உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதனால், அந்த காலகட்டத்தில் எட்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனினும், அதற்கு முந்தைய 28 நாட்களுடன் ஒப்பிடுகையில், மரண எண்ணிக்கை எட்டு விழுக்காடு குறைந்துள்ளது. மூவாயிரத்துக்கும் அதிகமான புதிய இறப்புகள் மட்டுமே பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, WHO அதன் மிக அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, கோவிட்-19 பெருந்தொற்று முதல் முறையாக அடையாளம் காணப்பட்டதிலிருந்து உலகளவில் மொத்தம் 77 கோடியே 20 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் வேளை; மரண எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆகக் கடைசியாக, உருமாறிய JN.1 தொற்று அதிவேகமாக பரவி வரும் போதும், தற்போதுள்ள, கோவிட்-19 தடுப்பூசிகள் அதனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளதாக, WHO கூறியுள்ளது.