கோலாலம்பூர், பிப்ரவரி 20 – தலைநகர் சுற்று வட்டாரப் பகுதியில், DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், அசுத்தமாக காணப்பட்ட மூன்று உணவகங்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு குற்றங்களுக்காக 65 அபராத பதிவுகள் வெளியிடப்பட்டன.
அந்த சோதனை, மொத்தம் 58 வர்த்தக வளாகங்களை உட்படுத்தி இருந்தது.
குறிப்பாக, செதியவங்சாவிலுள்ள, ஜாலான் கெந்திங் கிள்ளான், திதிவங்சாவிலுள்ள, ஜாலான் மக்தாப், பத்துவிலுள்ள, தாமான் மாஸ்தியாரா, வங்சா மாஜுவிலுள்ள, கே.எல். ஈஸ்ட் மால், பண்டார் துன் ரசாக்கிலுள்ள, தாமான் புக்கிட் அங்கெரிக் மற்றும் கெப்போங், ஜாலான் ரிம்புனன் ராயா 1 ஆகிய பகுதிகளை உள்ளடக்கி அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வேளையில், உணவு வளாக உரிமையாளர்கள் அல்லது நடத்துனர்கள், சுகாதார பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்றுவதை உறுதிச் செய்ய, இதுபோன்ற அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடரும் என, கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.