பிந்துலு , நவ 1 – வழக்கத்தைவிட முகம் முழுவதிலும் முடியினால் மூடப்பட்டதோடு மூக்கில் ஒரு துவாரம் இல்லாத நிலையில் பிறந்த தமது 2 வயது பெண் குழந்தை மிஸ்க்ளின் (Missclyen)னை மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அசிசா அமினா வளர்ப்பு பிள்ளையாக எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து அக்குழந்தையின் தந்தையான சரவாக்கை சேர்ந்த ரோலண்ட் ஜிம்பாய் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை இஸ்தானா நெகாராவிடமிருந்து தாம் பெற்றதாக 47 வயதுடைய ரோலண்ட் கூறினார். அக்டோபர் 10ஆம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில் குழந்தை மிஸ்க்ளினின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாகவும் பேரரசியார் தெரிவித்திருந்தார். அந்த குழந்தையின் பள்ளி தொடர்பான விவகாரங்களுக்கு ரோலண்ட் பராமரிப்பாளராக பொறுப்பேற்பார் என்றும் பேரரசியார் குறிப்பிட்டுள்ளார்.
தமது கடைசிப் பிள்ளையான மிஸ்க்ளின் நோய்க்கான மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதற்கு துங்கு அசிசா அமினா முன்வந்ததன் மூலம் அக்குழந்தையை வளர்பதற்கான தமது சிரமம் குறைந்திருப்பதாகவும் ரோலண்ட் தெரிவித்தார். தமது குழந்தை மீது பரிவை கொண்டிருக்கும் துங்கு அசிசா அமினாவுக்கு அவர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தற்போது இஸ்தானா நெகாராவிலிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்தை மட்டுமே தாம் பெற்றுள்ளதாகவும் பேரரசியாரை சந்திப்பதற்கான கடிதம் எதனையும் இன்னும் பெறவில்லையென்றும் ,பேரரசியார் கேட்டுக்கொண்டால் தமது குழந்தையுடன் அவரை சந்திப்பதற்கு தயாராய் இருப்பதாக ரோலண்ட் தெரிவித்தார்