கோலாலம்பூர், பிப்ரவரி-23 மலேசிய வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச முதலீட்டுத் தொகையாக கடந்தாண்டு 329.5 பில்லியன் ரிங்கிட் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 23 விழுக்காடு அதிகம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அத்தொகையில், 57 விழுக்காடு அந்நிய முதலீடுகள்; 43 விழுக்காடு உள்நாட்டு முதலீடுகள்.
வியாழக்கிழமை நடைப்பெற்ற தேசிய முதலீட்டு மன்றத்தின் கூட்டத்தின் போது அவ்விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமர் கூறினார்.
முன்னேற்றகரமான இந்த முதலீட்டுச் சூழல், மடானி அரசாங்கத்தின் ஓராண்டு கால ஆட்சியின் கீழ் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெறுவதை நன்கு பறைச்சாற்றுகிறது.
அதோடு, ஒற்றுமை அரசாங்கத்தின் முதலீடு மற்றும் வர்த்தகத் தோழமைக் கொள்கை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் பலனளிக்கத் தொடங்கியிருப்பதை அது காட்டுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் 5,101 திட்டங்களை உட்படுத்தியுள்ளதுடன், நாட்டு மக்களுக்கு 1 லட்சத்து 27 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் எனவும் பிரதமர் கூறினார்.
இவ்வேளையில், 2021-2023 காலக்கட்டத்தில் 396 டிஜிட்டல் முதலீட்டுத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
128.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அந்த முதலீடு டிஜிட்டல் துறையில் 36,553 வேலை வாய்ப்புகளை உருவாகும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.