ஷா ஆலாம், மார்ச்-20, சிலாங்கூர் ஷா ஆலாமில் நோன்புத் துறப்பதற்காக தாம் தயாராக வைத்திருந்த ஆரஞ்சு சுவைபானத்தை குடித்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, சக ஊழியரை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார் பாகிஸ்தானிய ஆடவர்.
அச்சம்பவம் செக்ஷன் 16-ல் உள்ள தொழிற்சாலையொன்றில் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் நேற்றிரவு நிகழ்ந்தது.
கொல்லப்பட்டவர் 49 வயது வங்காள தேச ஆடவர் என
ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷ்னர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
தொழிற்சாலை ஊழியர்களின் தங்குமிடமாக மாற்றப்பட்ட கண்டேய்னரில் 51 வயது கொலையாளியும் அந்த வங்கதேசியும் தங்கியிருந்ததாக தெரிய வருகிறது.
தான் குடிக்க வேண்டியதை நண்பர் குடித்து விட்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்ட அந்த பாகிஸ்தானியர், சமயலறையில் இருந்த கத்தியைக் கொண்டு வந்து அவரை பல முறை குத்தியிருக்கிறார்.
இரவு 7.30 மணி வாக்கில் அவரைக் கைதுச் செய்த போலீஸ், கொலைச் செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தது.
அக்கொலை குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஒரு வேளை மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றால், 12-கும் குறையாமல் பிரம்படிகள் விதிக்கப் பட வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது.