ஜோகூர் பாரு, டிச 27 – 7 வயது சிறுவனை கடத்தியதாக பதின்ம வயதுடைய மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் ஆர். சாலினி முன்னிலையில் 18 வயதுடைய ஜொனாதன் யேட் மற்றும் 18 வயதுக்கும் குறைந்த மேலும் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இம்மாதம் 12 ஆம் தேதி ஜோகூர் பாரு ஜாலான் செராம்பாங்கில் மாலை மணி 5.15 அளவில் முதல் வகுப்பு மாணவனை கடத்தியதாக அம்மூவர் மீது குற்றஞ்சாட்டப்பது. எனினும், அம்மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர். குற்றவியல் சட்டத்தின் 363ஆவது விதி மற்றும் அதே சட்டத்தின் 34ஆவது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞரான டி.பி.பி ஷமிரா முகமது லுத்ஃபி இஸ்மாயில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை கொண்டு வந்தார். அந்த மூவருக்கும் தலா 2,500 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஜனவரி 23ஆம் தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும். அதற்கு முன்னதாக தங்களை தற்காத்துக் கொள்வதற்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளும்படி அம்மூவரையும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.