சென்னை , டிச 18 – தமிழ் நாட்டில் பல இடங்களில் அடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தினால் பல இடங்களில் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கினால் திருச்செந்தூரில் பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். திருந்செந்தூரில் மின்சார இணைப்பு , தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கால் கடல்போல காட்சி அளித்தது. கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ரயில் தண்டவாளப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பல மாவட்டங்களில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வெலியில் 13 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டன. இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை தொடர்ந்து பெய்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் அடைமழை பெய்து வருகிறது.