புத்ராஜெயா, மார்ச் 18 – வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது, உல்லாச விடுமுறைக்காக அல்ல.
மாறாக, நாட்டின் நலனுக்காக முதலீட்டாளர்களை கவரவே தாம் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொண்டு வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
விடுமுறைக்கு செல்வதற்காக, அதிகமான பணத்தை செலவிட்டு வருவதாக சில தரப்பினர் குற்றம்சாட்டுவது, தமக்கு தெரியுமென பிரதமர் சொன்னார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், நிறைய பணத்தை செலவழிப்பதாகவும், அரசாங்க விமானத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவதாகவும், வெளிநாட்டில் உல்லாச பயணம் மேற்கொள்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தமக்கு எதிராக தொடுக்கப்படுவதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
“அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஜெர்மனிக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த போது, கடைக்கு கூட செல்லவில்லை. தங்கும் விடுதி, கூட்டம் நடைபெறும் இடம் என மட்டுமே செல்ல நேரம் இருந்தது” என பிரதமர் சொன்னார்.
புத்ராஜெயாவில், பிரதமர் துறையின் மாதந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.