கோத்தா கினாபாலு, பிப்ரவரி 28 – சபாவில், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக வரிசையில் நிற்கும் போது தெரியாமல் இரு தொழிலாளர்கள் தோளோடு தோள் மோதி கொண்டதால், ஒரு தொழிற்சாலையே கலவரமானது.
கோத்தா கினாபாலுவிலுள்ள தொழிற்சாலையில் தான் திங்கட்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தோளோடு தோள் மோதியவர்களில் ஒருவர் வெளிநாட்டவர், இன்னொருவர் உள்ளுரைச் சேர்ந்தவர்.
தோள் உரசி விட்டதால் அந்த வெளிநாட்டுத் தொழிலாளி கோபத்தில் முகத்தில் குத்திய போதும், குத்து வாங்கியவர் பொறுத்து போயிருக்கிறார்.
எனினும் உடன் இருந்தவர்கள் சும்மா இருக்காமல், கட்டையைத் தூக்கி கொண்டு அச்சண்டையில் நுழைய, இருவர் சண்டை இரு கும்பல்களுக்கு இடையிலான சண்டையாகி அந்த இடமே கலவரமானது.
கடைசியில் பாதுகாவலர்களும் மற்ற தொழிலாளர்களும் சண்டையை விலக்கி விட்டு ஒருவழியாக கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
தோள் உரசியதற்காக குத்து வாங்கியவருக்கு அச்சண்டையில் முட்டிக் காலிலும் காயமேற்பட்டது.
5 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள வேளை, தோளோடு தோள் உரசியதற்காகக் கூடவா அடித்துக் கொள்வீர்கள் என நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.