லஹாட் டத்து, ஜனவரி 30 – சபா, லஹாட் டத்துவில், குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளின் பிரச்சனைக்கு தீர்வுப் பிறக்கவில்லை.
அதனால், எரிச்சலடைந்த மர்ம நபர் ஒருவர், சாலையில் தென்பட்ட குழியில் வாழை மரத்தை நடவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடு ரோட்டில் வாழை மரம் நட்டு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில், ஜாலான் சண்டகான் – லஹாட் டத்து சாலையில், விரைவுப் பேருந்தையும், கார் ஒன்றையும் உட்படுத்திய விபத்தில், சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அந்த வாழை மரம் நடப்பட்டுள்ளது.
குண்டும் குழியுமாக காணப்படும் சாலையில் வாழை மரத்தை நடுவது சிறந்த தீர்வாக அமையுமென, முஹமட் அரிபின் எனும் இணைய பயனர் ஒருவர் வைரலான புகைப்படத்திற்கு கீழ் பதிவிட்டுள்ளார்.
அவரது அந்த கருத்தை பலரும் வரவேற்றுள்ள வேளை ; வாழை மரத்திற்கு பதிலாக தென்னை மரங்களை நடுங்கள் என அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.