வார்சா, பிப்ரவரி 27 – போலந்தில், குதிரையை திருடியதோடு, அதனை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியிலுள்ள, வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 19 வயது இளைஞன் ஒருவன், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.
சம்பந்தப்பட்ட ஆடவன், அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டு வழியாக, குதிரையை மேல் மாடிக்கு கொண்டு சென்றது குறித்து, போலீசாரிடன் புகார் செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரை முதலில் போலீசார் கேலியாக எண்ணியதாக கூறப்படுகிறது.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அது உண்மை சம்பவம் என்பதும், தனது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்டை வீட்டுக்காரர்களுடன் சம்பந்தப்பட்ட இளைஞன் சண்டையில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
சுமார் 15 ஆயிரம் போலந்து ஸ்லோட்டிகள் அல்லது 18 ஆயிரத்து 34 ரிங்கிட் மதிப்புள்ள அந்த குதிரை மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடன் ஒப்படைக்கப்பட்ட வேளை ; அதனை திருடி அடுக்குமாடி வீட்டில் மறைத்து வைத்திருந்த இளைஞன் திருட்டு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.