கோத்தா கினபாலு, பிப் 8 – சபாவில் கினாபத்தாங்கன் ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 48 வயதுடைய ஆடவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரிஸ் 2, லாடாங் லிண்டேல் ஆற்றுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்தோனேசிய ஆடவரை முதலை இழுத்துச் சென்றதாக போலீசிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
போலீஸ், வனவிலங்குத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகளின் துணையுடன் ஆற்றில் 8 கிலோமீட்டர் தூரம் வரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆடவர் நேற்று கண்டுப்பிடிக்கவில்லை என்பதால் தேடும் நடவடிக்கை இன்று காலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த பேச்சாளர் கூறினார்.