கோலாலம்பூர், பிப் 1 – மாநில, தேசிய மற்றும் அனைத்துலக அளவில் என இதுவரை 17க்கும் மேற்பட்ட கூடைப்பந்து விளையாட்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளார் சுபாங் சீன ஆரம்பப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவரான செஹ்ரன்ராஜ் ஆனந்தன்.
பெற்றோரின் தொடர் ஊக்குவிப்பின் விளைவாக, 8 வயதியிலிருந்தே இவர் கூடைப்பந்து விளையாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர், 12 வயதுக்குட்பட்ட மலேசிய பள்ளி அளவிலான MSSM விளையாட்டு பிரிவு போட்டியில் சிறந்த முதன்மை விளையாட்டு வீரர் விருதையும் பெற்றுள்ளார்.
இவரின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டும் விதமாக ம.இ.கா கட்சியின், கல்வி மேம்பாட்டு குழுவின் தலைவரான செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன், செஹ்ரன்ராஜ்க்கு பொன்னாடையும் மலர் மாலையையும் சூட்டி கெளரவித்தார்.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ம.இ.கா செயல்படுவதாக செஹ்ரன்ராஜ் தந்தை வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இதனிடையே, கல்வி ஒன்றே சமுதாயத்தை மேம்படுத்தும். அவ்வகையில் மாணவர்களின் சாதனைகளைப் அங்கீகரிக்கவும் அவர்களும் ஆதரவளிக்கவும் ம.இ.கா என்றும் உறுதுணையாக இருக்கும் என செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் உறுதியளித்தார்.