அமிதபாத்தி , ஜன 19 – இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் சுற்றுலா சென்ற 12 மாணவர்கள் உட்பட 14 பேர் மூழ்கி மாண்டனர். தங்களது பள்ளி ஏற்பாடு செய்த சுற்றுலாவில் மாணவர்கள் கலந்துகொண்டபோது இந்த துயரச் சம்பவம் நடந்தது. படகு கவிழ்ந்த வடடோரா நகருக்கு அருகேயுள்ள ஏரியில் உயிர் தப்பியவர்களை தேடும் பணியில் பலர் ஈடுபட்டனர். மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்திருப்பதாக மருத்துவமனை சூப்பிரடெண்ட் ரஞ்சர் ஐயர் தெரிவித்தார். இந்த பேரிடரில் மரணம் அடைந்தவர்களில் 10 வயதுடைய மாணவர்களும் அவர்களது இரண்டு ஆசிரியர்களும் அடங்குவர் என மருத்துவமனையின் இதர அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கவிழ்ந்த படகில் மொத்தம் 27 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.