சிரம்பான், ஜன 29 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் வெளிநாட்டு தொழிலாளர்களை மையப்படுத்தப்பட்ட குடியிருப்பு அல்லது வணிக மண்டலப் பகுதிகளில் முதலாளிகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி , வீடமைப்பு தி மற்றும் போக்குவரத்துக் குழுவுக்கான நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே அருள்குமார் தெரிவித்திருக்கிறார்.
விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டிடங்களில் தங்குமிட வசதிகளை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துவது அல்லது வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடமாக வர்த்தக கட்டிடங்களில் குடியமர்த்தப்படுவதை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். அவர்களுக்காக அமைக்கப்படும் தங்கும் இடங்களில் வேலிகள் அமைக்கப்பட வேண்டும், அல்லது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அருள் குமார் கூறினார்.
இந்த நடவடிக்கையினால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களினால் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் தூய்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் நம்பிகை தெரிவித்தார். ஒவ்வொரு வெளிநாட்டுத் தொழிலாளிக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் கிடைப்பதை இது உறுதி செய்யும் என்பதோடு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்கும் வசதிகள் கட்டுமானத்திற்கு மாநில அரசாங்கம் உதவும் என்றும் அருள் குமார் கூறினார்.