கோலாலம்பூர். பிப் 5 – பணியில் இருந்தபோது 3,313 ரிங்கிட் ரொக்கத்தை எடுத்துச் சென்ற போக்குவரத்து போலீஸ்காரரிடம் உட்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுனர்களிடம் நேற்று சோதனை நடத்தும் நடவடிக்கையில் உட்படுத்தப்பட்ட அந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் 3,313 ரிங்கிட் இருந்ததைத் தொடர்ந்து புக்கிட் அமான் நன்னெறி மற்றும் தரநிலைகள் துறை விசாரணை நடத்தி வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
சார்ஜென்ட் தகுதியைச் கொண்ட போக்குவரத்து போலீஸ்காரரிடம் அந்த ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது காரில் மேலும் 440 ரிங்கிட் சிக்கியது என்று ஹுசைன் கூறியுள்ளார். இதில் ஏதேனும் ஊழல் அல்லது நடைமுறை மீறல்கள் உள்ளதா என்பதை கண்டறிய உள் ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்தார். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அமலாக்கத் துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.