கோலாலம்பூர், ஜனவரி 19 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட் பணமோசடி தொடர்பான, மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து, விடுவிக்கப்படாமல் விடுதலை செய்ய அல்லது முழுமையாக விடுதலை செய்ய வரும் செப்டம்பரில் மனு செய்யலாம்.
71 வயது நஜிப்பிற்கு எதிரான, அந்த அம்லா வழக்கு விசாரணை, செப்டம்பர் 17 தொடங்கி 24-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்பதால், நீதிபதி கே. முணியாண்டி அதனை தெரிவித்தார்.
தமக்கு எதிரான அம்லா வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் செய்திருக்கும் மனு தொடர்பில் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்க துணை வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து, நீதிபதி அவ்வாறு சொன்னார்.
நஜிப்பிற்கு எதிராக மேலும் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.
அதில் குறிப்பாக, 230 கோடி ரிங்கிட் நிதியை உட்படுத்திய 1MDB வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக மொத்தம் 49 சாட்சியாளர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, IPIC – சர்வதேச பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது தொடர்பான , 660 கோடி ரிங்கிட் நம்பிக்கை மோசடி வழக்கையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.
அதனால், தாம் எதிர்நோக்கியுள்ள, இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய SRC நிதி மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.