கிள்ளான், பிப் 1 – கிள்ளானில் ஆடவன் ஒருவன், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதால், ஆரஞ்சுப்பழம் மற்றும் பட்டாசுகள் விற்பனை செய்யும் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
போதிய பணம் இல்லாததால் பட்டாசு வாங்க முடியவில்லை என்று ஆத்திரமடைந்த அவ்வாடவன் அக்கடையின் மீது பெட்ரோல் பாட்டிலை வீசியதால் முடிந்த செவ்வாய்க்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட உள்ளூர்வாசியான அந்த நபர், சிவப்பு யமஹா 135 எல்.சி மோட்டார் சைக்கிளில் மாலை 4:30 மணியளவில் பட்டாசு வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றுள்ளார். பழங்களையும் பட்டாசுகளையும் விற்பனை செய்யும் அந்த வியாபாரி, அந்த ஆடவன் கேட்ட பட்டாசுகளை பேக் செய்துள்ளார். ஆனால், அந்த நபரிடம் தான் வாங்குவதற்கு பணம் இல்லை.
பணம் இல்லாததால் கடையின் உரிமையாளர் பட்டாசு பொட்டலத்தை திரும்ப எடுத்துக் கொண்டார். இதனிடையே வீடு திரும்பிய அந்த ஆடவன் இரவு 7 மணியளவில் மீண்டும் வந்து பெட்ரோல் இருப்பதாக நம்பப்படும் பாட்டிலை கடையை நோக்கி வீசியுள்ளார்.
இந்நிலையில், 25 வயதான அந்த வேலையில்லாத ஆடவன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டான். இதற்கு முன்னதாக இரண்டு குற்றப் பதிவுகளையும் அவன் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.