கோலாலம்பூர், மார்ச் 26 – மலேசியாவில் வேலை செய்யும், அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 21 லட்சத்து 70 ஆயிரத்தை எட்டியுள்ளது.
அந்த எண்ணிகையானது, 12-வது மலேசிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அந்நிய தொழிலாளர்கள் இலக்கை நெருங்கி வருவதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இம்மாதம் 15-ஆம் தேதி வரையிலான, குடிநுழைவுத் துறையின் தரவுகள் அடிப்படையில் அது தெரிய வந்துள்ளதாகவும் ஸ்டீவன் சொன்னார்.
அதனால், தற்சமயம் புதிதாக அந்நிய தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்கும் நடவடிக்கைகளை முடக்கும் முடிவை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
அதோடு, உள்துறை அமைச்சால் கண்காணிக்கப்படும், 2.0 தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கள்ளக்குடியேறிகளை தணிக்கை செய்யும் இறுதிகட்ட பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அது முழுமை பெற்ற பின்னரே, அந்நிய தொழிலாளர்களை தருவிக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் விதித்திருக்கும் தடை அகற்றப்படுமா என்பது குறித்து முடிவுச் செய்யப்படுமென, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.