கோலாலம்பூர், பிப்ரவரி 7 – வெளிநாட்டு பதிவு எண்ணை கொண்ட வாகன உரிமையாளர்கள், RON95 பெட்ரோலை வாங்க அனுமதிக்கும் எண்ணெய் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இணையப் பயனர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து அந்த வலியுறுத்தல் முன் வைக்கப்பட்டுள்ளது.
விவேக கைப்பேசி வாயிலாக பதிவுச் செய்யப்பட்ட அந்த காணொளியில், மானிய விலையில் விற்கப்படும் RON95 பெட்ரோலை தங்கள் வாகனத்தில் நிரப்பிக் கொண்டிருக்கும், சிங்கப்பூர் தம்பதியை மலேசிய ஆடவர் ஒருவர் கண்டிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“நீங்கள் சிங்கப்பூர் நாட்டவர்கள் தானே? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அது எங்கு பதிவுச் செய்யப்பட வாகன எண்? நீங்கள் எப்படி RON95 பெட்ரோலை பயன்படுத்த முடியும்? நீங்கள் மலேசியாவின் வளங்களை திருடுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிகிறதா?” என அவ்வாடவர் வினவுகிறார்.
எனினும், அதற்கு பெண் ஒருவர், நான் மலேசியர் என பதிலளிக்கிறார்.
அதனால், சினமடைந்த அவ்வாடவர், “உங்கள் வாகன பதிவு எண் எந்நாட்டை சேர்ந்தது? சிங்கப்பூர் தானே? RON95 பெட்ரோலை வாங்க உங்களுக்கு அனுமதி உண்டா?” என கேட்கிறார்.
அதன் பின்னரே, RON95 பெட்ரோலை வாங்க முடியாது என்பது தங்களுக்கு தெரியாது என அந்த தம்பதி மன்னிப்பு கோரும் காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
அதோடு, சிங்கப்பூர் பதிவு எண்ணை கொண்ட வாகன உரிமையாளர்கள், RON95 பெட்ரோலை வாங்க யார் அனுமதி தந்தது என, அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தின் பணியாளர் ஒருவரை கேட்பதையும் காண முடிகிறது.
அந்த வீடியோ குறித்து, மலேசியர்கள் பலர் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, அதுபோன்ற சம்பவங்களை தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென அவர்களில் பலர் வலியுறுத்தியுள்ளனர்.