பகாங், பிப்ரவரி – 19 வேலைக்குத் தாமதமானதற்கு நம்மில் பலர் எத்தனையோ காரணங்களைச் சொல்லியிருப்போம். ஆனால், பகாங்கில் இருவர், வேலைக்குத் தாமதமானதற்கு யானைகள் காரணமாகியிருக்கின்றன.
ஜாலான் குவாலா தாஹான் – ஜாலான் புக்கிட் அவான் பகுதியில் தான் அந்த ‘cute’-டான சம்பவம் நிகழ்ந்தது. காலையிலேயே யானைகள் வழியை மறித்ததால், கார் நகர முடியாமல் வேலைக்குத் தாமதமாகிய இருவர் அக்காட்சியைக் கைப்பேசியில் பதிவுச் செய்திருக்கின்றனர்.
அதில், யானைகள் வழியை மறித்து நிற்பதும், காரை நோக்கி சீறி வருவதும் போவதுமாக இருப்பது தெரிகிறது.
“இப்படியே போனால் நாங்கள் எப்படி வேலைக்கு போவது? யானைகள் எங்களுக்கு வழி விடுவதாக தெரியவில்லை” என அவர்கள் பேசிக் கொள்வதும், அதை முதலாளியிடம் கூறி வேலைக்குத் தாமதமானால் மன்னிக்கவும், அது எங்கள் தவறல்ல என்றுக் கூறுவதும் அந்த வைரல் வீடியோவில் தெரிகிறது.
யானைகள் பின் வாங்கும் என காத்திருந்து சோர்ந்த போன இருவரும் ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, காரின் ஆக்சிலேட்டரை அழுத்தி, யானைகள் கூட்டத்தைக் கடந்தனர். அப்போது ஒரு யானை சற்று தூரம் காரை விரட்டிச் சென்று ஓய்ந்து போனது. நண்பர்கள் இருவரும் ‘உயிர் தப்பியதற்காக’ கடவுளுக்கு நன்றி சொல்கின்றனர்.
@JoeInvisibleGirl என்ற டிக் டோக் பக்கத்தில் பதிவேற்றம் கண்ட அவ்வீடியோவை எதிர்பார்த்தபடியே ஆயிரக்கணக்கானோர் பார்த்து கருத்துகளைப் பதிவுச் செய்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர், இனி வேலைக்குத் தாமதமானால் நானும் இதே காரணத்தைக் கூறப் போகிறேன் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இன்னொருவர், அடடா…இதுவல்லவா காரணம் என சொன்னார்.
டோல் கட்டணம் செலுத்தவில்லை என்றால் யாருக்குத் தான் கோபம் வராது என, யானைகளைச் சாலைக் கட்டண வசூலிப்பாளர்களுக்கு ஒப்பிட்டு மற்றொரு நெட்டிசன் போட்ட பதிவும் சிரிப்பை வரவழைத்தது.