ஜொகூர் பாரு, டிசம்பர் 5 – ஜொகூரிலுள்ள, உணவகம் ஒன்றில் பாராங் கத்தியை கொண்டு சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர், போலீசார் மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டடம் ஒன்றுக்கு முன்புறம், கூரிய ஆயுதத்துடன் ஆடவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து, 26 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
நேற்று பின்னிரவு மணி 12.48 வாக்கில், அந்த சண்டை நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக, ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த சண்டைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. கைதுச் செய்யப்பட்டவர்களிடமிருந்து, பாராங் கத்தி ஒன்று, நான்கு கைபேசிகள், பயணம் பை உட்பட கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர். அச்சம்பவம் தொடர்பில், தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.