ஈப்போ, மார்ச் 1 – எண்ணெய் நிலையத்தில் புகைப்பிடித்துக் கொண்டே டீசல் நிரப்பியப் பேருந்து ஓட்டுநரின் செயல் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் பெஹ்ராங் அருகே ஞாயிற்றுக் கிழமை அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது வைரலாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் அச்செயலை போலீஸ் கடுமையாகக் கருதுவதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் முஹமட் ஹஸ்னி முஹமட் நசிர் தெரிவித்தார்.
அது குறித்து உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சிடம், எண்ணெய் நிலைய உரிமையாளரும் நேடியாக புகாரளித்திருக்கிறார்.
பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வமைச்சின் நேடி அதிகாரத்தின் கீழ் வருவதாக முஹமட் ஹஸ்னி சொன்னார்.
2004 புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், அக்குற்றத்திற்கு அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகைப்பிடிக்க வேண்டாம் என அவர் இவ்வேளையில் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தினார்.
குறிப்பாக எண்ணெய் நிலையங்களில் அது போன்ற பொறுப்பற்றச் செயல்களில் ஈடுபட்டு, அசம்பாவிதங்களுக்கு வித்திட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
சிகரெட் பிடித்துக் கொண்டே அவ்வாடவர் பேருந்துக்கு எண்ணெய் நிரப்பும் காட்சி அடங்கிய 57 வினாடி காணொலி முன்னதாக வைரலானது.
மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான அவரின் அச்செயலைக் கண்டித்து நெட்டிசன்கள் அவரை ‘ வறுத்தெடுத்து’ வருகின்றனர்.