ஷா அலாம் , மார்ச் 11- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் கோடிக்காட்டியுள்ளார்.
கடந்த மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளில் மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். ஓரிரு தொகுதிகளில் மஇகா பிரதிநிதிகளின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அவை தற்போது பரிசீலனையில் உள்ளன.
மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமிக்கப்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பெயர்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று அவர் தெரிவித்தார். பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பொறுத்த வரை அமானா கட்சியின் ஒரு இடம் தவிர்த்து இதர அனைத்து தொகுதிகளுக்கும் இந்திய சமூகத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இது தவிர தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். சிலாங்கூரில் உள்ள ஏறக்குறைய 64 இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் 28 பேருக்கு மட்டும் இன்னும் நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை. அடுத்த வாரத்திற்குள் அக்கடிதங்கள் வழங்கப்பட்டு விடும் என அவர் தெரிவித்தார்.