பாரக், டிச 22 – செக் குடியரசின் தலைநகர் ப்ராக்கிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் ஒருவன் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 14 பேர் மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செக் குடியரசின் நவீனகால வரலாற்றில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் சம்பவம் இதுவாகும். தாக்குதல் நடத்திய 24 வயது துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக ப்ராக் போலீசார் தெரிவித்தனர்.
அந்த தாக்குதலின்போது பல்கலைக்கழக பணியாளர்கள் தங்களது அறைகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்புலன் கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
பலர் பல்கலைக்கழக வளாகத்தின் கட்டிடம் ஒன்றின் முற்றத்திலிருந்து கீழே குதித்து தப்பியோடினர். அந்த துப்பாக்கிக்காரன் இதற்கு முன் பல்கலைக்கழகத்தின் கலைப்புலன் மாணவராக இருந்தவன் என செக் குடியரசின் போலீஸ் தலைவரும், உள்துறை அமைச்சரும் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அந்த சந்தேகப் பேர்வழி ப்ராக்கிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் என கூறப்பட்டது. அந்த சந்தேகப் பேர்வழியின் தந்தை நேற்று இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.
அந்த துப்பாக்கிக்காரன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை. கடந்த வாரம் ப்ராக்கிற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருவர் மரணம் அடைந்ததற்கும் அந்த சந்தேகப் பேர்வழி காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.