குவாலா பெஞ்யு, மார்ச் 28 – சபா, Kuala Penyu, Kampung Jangkit கிராம கடற்கரையில், திடீரென ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவத்திற்கு, அதீத வெப்பமான வானிலை தான் காரணம் என கூறப்படுகிறது.
குறிப்பாக, சபாவில் ஏற்பட்டுள்ள வெப்பமான வானிலை அல்லது வறட்சியுடன் அது நெருங்கிய தொடர்புடையது என, சபா மலேசிய பல்கலைக்கழகத்தின், போர்னியோ கடல் ஆராய்ச்சி கழக இணை பேராசிரியர் டாக்டர் சிங் புய் புய் கூறியுள்ளார்.
காற்றில் நிலை அலைகளை பாதித்துள்ளது. அதனால் தெற்கே இழுத்துச் செல்லப்படும் நீரோட்டத்தின் விளைவாக அந்த ஜெல்லிமீன்கள் கரை ஒதுக்கியிருக்கலாம் என புய் புய் சொன்னார்.
ஜெல்லிமீன்கள் பெரும்பாலும் மிக இலகுவானவை. அவை மிகவும் எளிதாக அடித்துச் செல்லக்கூடியவை. அதனால்தான், அவை கரை ஒதுக்கி கிடக்கின்றன.
எனினும், அவ்வாறு கரை ஒதுங்கிய ஜெல்லிமீன்கள் அதிகபட்சம் ஒரு நாள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்றாலும், மடிந்த ஒரு வாரத்திற்கு மேலானாலும் அவற்றின் கொட்டும் ஆற்றல் போகாது.
அதனால், கரை ஒதுங்கி மடிந்து கிடக்கும் ஜெல்லிமீன்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுதப்பட்டுள்ளது.
ஜெல்லிமீன்கள், ஒருவரின் கை அல்லது காலில் படும் போது, எரிச்சலையும், அசெளகரியத்தையும் ஏற்படுத்தலாம் என புய் புய் சொன்னார்.
முன்னதாக, Kuala Penyu கடற்கரையில், ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கி கிடக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அங்கு அதுபோன்ற சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என சுற்று வட்டார மக்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.