கோலாலம்பூர், ஜனவரி 30 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கொல்லப் போவதாக கடந்தாண்டு டிக் டொக்கில் மருட்டல் விடுத்த லோரி ஓட்டுனர் ஒருவருக்கு, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், அந்த தீர்ப்பை செவிமடுத்த சம்பந்தப்பட்ட நபர், அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதான்.
35 வயது பைசால் முஹமட் எனும் அந்நபர் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி என்.பிரிசில்லா ஹேமாமாலினி அந்த தண்டனையை விதித்தார்.
@jaiadani89 எனும் டிக் டொக் கணக்கில், தெரிந்தே அவன் அந்த மருட்டலை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கடந்தாண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நண்பகல் மணி 12 வாக்கில், ஜாலான் தொங் சின்னிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், பிறரை புண்படுத்தும் நோக்கில் அவ்வாடவன் அந்த பதிவை வெளியிட்டிருந்தான்.
முன்னதாக, அன்வாருக்கு கொலை மருட்டல் விடுத்த ஆடவன் ஒருவன், கிளந்தான், கோத்தா பாருவிலுள்ள, ஜாலான் பாடாங் தெம்பாக் எனுமிடத்தில் கைதுச் செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதோடு, பிரதமரையும், அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் சுட்டுக் கொல்பவருக்கு 50 லட்சம் தயார் என அவன் கூறிய காணொளி ஒன்றும் டிக் டொக்கில் வெளியிப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அந்த காணொளி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.