கோலாலம்பூர், டிச 27 – பள்ளி விடுமுறை நாட்கள் தொடங்கியது முதல் லங்காவிக்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 170,000 பேராக அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த தீவு மீண்டும் முக்கிய சுற்றுலா மையம் என்ற புத்துணர்வை பெற்றுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி பள்ளி விடுமுறையின் முதல் வாரத்தின்போது லங்காவி தீவுக்கு 68,000 பேர் வருகை புரிந்ததாக “Lada” எனப்படும் லங்காவி மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதன்வழி அந்த தீவுக்கு தினசரி சராசரி 11,000 பேர் வருகை புரிந்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி 1ஆம்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை மொத்தம் 2.63 மில்லியன் சுற்றுப்பயணிகள் லங்காவிக்கு வருகை புரிந்துள்ளதாக Lada வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மார்க்கம் மூலமாக லங்காவிக்கு 58 விழுக்காடு சுற்றுப் பயணிகள் வந்துள்ளனர். இதர 42 விழுக்காட்டினர் அல்லது சுற்றுப்பயணிகளில் 90 விழுக்காட்டினர் விமானத்தின் மூலம் லங்காவிக்கு சென்றுள்ளனர். எனவே வரும் 2024 புத்தாண்டு லங்காவியில் மேலும் அதிகமான சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை எதிர்பார்க்கலாம் என லங்காவி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.