கோலாலம்பூர், ஜன 22 – டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா , பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா ஆகியோர் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டனர். மலேசியாவில் அரசு பொதுச்சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியான தேவகி கிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை தமது இல்லத்தில் காலமானார்.
மலேசிய அரசு சேவைக்கு அவரது மறைவு பெரிய இழப்பு என்பதோடு நாடு மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்கு என்றும் மறக்க முடியாத ஒன்று என பேரரசர் தம்பதியர் வருணித்தனர். மலேசிய இந்திய பெண்களின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவது பெண்மணி என்ற வரலாறு படைத்த தேவகி கிருஷ்ணன் 1952 ஆம் ஆண்டு, முதல் முறையாக நடைபெற்ற கோலாலம்பூர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு 1955 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பங்சார் நகராட்சி மன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை சமுதாய சேவைக்காக அர்ப்பணித்த அவர் தமது 100 ஆவது வயதில் காலமானார்.