உத்தரகாசி, நவ 29 – இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்கு கீழ் சுரங்கப் பாதை நிர்மாணிக்கும் பணியின்போது அந்த சுரங்கம் இடிந்ததில், அதில் சிக்கிக்கொண்ட அனைத்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். நவம்பர் 12 ஆம் தேதி நிகழ்ந்த அந்த சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிக்கொண்ட 17 நாட்களுக்குப் பின், அந்த தொழிலாளர்கள் அனைவரும் பொறியியலாளர்கள் , ராணுவ வீரர்கள் உட்பட இந்திய மீட்புக் குழுவினரால் நேற்று மீட்கப்பட்டனர். நேற்று மாலையில் தொழிலாளர்களை மீட்பதற்கான துளையிடும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதோடு அவர்கள் ஒவ்வொருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனிடையே தொழிலாளர்களை மீட்பதற்காக இரவு பகல் பாரமால் சளைக்காமல் போராடிய மீட்புப் படை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்திய அதிபர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ,உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மீட்புப் பணிளை நேரடியாக சென்று பார்வையிட்ட புஷ்கர் சிங் தாமி மீட்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். மீட்கப்பட்ட முதல் நபரின் கழுத்தில் அவர் மாலையிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.