ஈப்போ , டிச 3- உணவகம் ஒன்றில் மீ விற்பனையாளரை அறிமுகமில்லாத வாடிக்கையாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஈப்போதாமான் செமர்லாங் ராபாட்டை சேர்ந்த அந்த 44 வயதுடைய மீ விற்பனையாளர் வயிற்றில் கத்திக் குத்துக்கு உள்ளானதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று காலை மணி 6 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் யஹாயா ஹசான் தெரிவித்தார். ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அந்த வர்த்தகரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.