ஷா அலாம், டிச 14 – கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் நேற்றிரவு பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 26 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
எஸ்.கே.ஜெயா சேத்தியா ‘SK Jaya Setia’ மற்றும் பாரிட் மஹாங் சமூக மண்டபத்தில் அமைக்கப்பட்ட நிவாரணை மையத்தில் அவர்கள் அனைவரும் தங்கியுள்ளனர்.
உலுசிலாங்கூரில் கம்போங் சுங்கை செலிசெக்கில் சுங்கை பெர்னாம், ஆற்றில் நேற்று அபாய கட்டத்தைவிட அதிக அளவில் நீர்மட்டம் இருந்தது.
எனினும், இன்று காலையில் அந்த ஆற்றின் நீர்மட்டம் குறையத் தொடங்கியதாக சிலாங்கூர் பேரிடர் நிர்வாக குழுவின் செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே பேராவில் லாருட், மாதாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களிலும் நேற்று கடுமையாக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் மஸ்ஜித் அல்-வுஸ்தாவில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.