அம்பாங் ஜெயா, டிசம்பர் 28 – கடந்த வியாழக்கிழமை, போலீஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டை, கல்லூரி மாணவர் ஒருவர், அம்பாங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.
எனினும், அவர் வயது குறைந்தவர் என்பதாலும், சமூக நலத் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாலும், அவருக்கான தண்டனை ஜனவரி 31ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், பந்திங்கிலுள்ள, “ஆட்டோமொபைல்” கல்லூரி மாணவரான 18 வயது முஹம்மது டேனிஷ் டார்விசி அலி சாகிர், கடந்த வியாழக்கிழமை, அதிகாலை மணி 4.50 வாக்கில், சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த, மூன்று போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பி செல்ல முற்பட்டதன் வாயிலாக அவர்களின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஈராயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவர் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; அவருக்கான தண்டனையை ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்.