புத்ரா ஜெயா, மார்ச்-26, மோட்டார் வாகனங்களுக்கான பரிசோதனைச் சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள், வரும் ஜூன் முதல் அதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வாகனப் பரிசோதனைச் சந்தையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்கி பொது மக்களுக்கான சேவையை எளிதாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அதனை பிற நிறுவனங்களுக்கும் திறந்து விடுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
அச்சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள், அவ்வப்போதையக் கால பரிசோதனைக்கான வழிகாட்டிகளை, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையம் வாயிலாகப் பார்க்கலாம்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை JPJ-வின் இணைய அகப்பக்கங்களில் அது பதிவேற்றம் செய்யப்படும்.
வாகன பரிசோதனை தொடர்புடையவற்றைத் தவிர்த்து, மோட்டார் வாகனங்களைப் பழுதுப் பார்ப்பது, வாகனங்களை மாற்றியமைப்பது, உபரிப் பாகங்களை விற்பது, வாகனங்களை விற்பனை உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அமைச்சர் நினைவுப்படுத்தினார்.
கணினி முறையிலான வாகன பரிசோதனை மையம் Puspakom-மின் குத்தகை ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைந்ததும், அது மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக சந்தையில் ஒரே சேவை வழங்குநராக அது வலம் வந்த நிலைமை, இனியும் இருக்காது.
மாறாக, அதே சேவையை வழங்க விரும்பும் பிற தனியார் நிறுவனங்களுக்கும் அது திறக்கப்படும் என அமைச்சரவை கடந்த மார்ச் 17-ஆம் தேதி முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.