கோலாலம்பூர்,டிச 18 – கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில்
44.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான “Xylazine” எனப்படும் “Zombie” போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டிசம்பர் 9ஆம் தேதி 807.9 கிலோ எடையுள்ள அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையின் துணை இயக்குனர் சசாலி முகமட் தெரிவித்தார். அதிகாலை 12.30 மணியளவில் 72 போத்தல் அலுமினியம் இருந்த 36 பெட்டிகளில் அந்த திரவமய போதைப் பொருள் இருந்ததாக அவர் தெரிவித்தார். மோர்பினை விட 100 மடங்கும் ஹெராயினை விட 40 மடங்கும் அதிக அபாயத்தை அந்த “Zombie” போதைப் பொருள் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
முதல் முறையாக “Zombie” போதைப் பொருளை சுங்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாக சசாலி முகமட் தெரிவித்தார். எனினும் இந்த போதைப் பொருள் மலேசிய சந்தைக்கு அல்ல என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சசாலி முகமட் கூறினார். இந்தியாவின் மும்பை அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த போதைப் பொருள் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் மூலமாக துபாய்க்கு விமானம் மூலம் அனுப்பப்படுவதற்காக கே.எல்.ஐ.ஏ சரக்கு முனையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சசாலி தெரிவித்தார்.