புத்ராஜெயா, பிப்ரவரி 9 – கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கும் 18 விதிகளில் 16, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என கூறி, அவற்றை கூட்டரசு நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.
அந்த 16 விதிகளில் இடம்பெற்றுள்ள குற்றங்களுக்கு, கூட்டரசு சட்டம் உள்ளது.
அதனால், அவை தொடர்பில், தனிச் சட்டம் இயற்றும் அதிகாரம் கிளந்தான் மாநில அரசாங்கத்துக்கு இல்லை, அவ்வழக்கை செவிமடுத்த, ஒன்பது பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற, தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்தார்.
அதனால், அவ்விதிகளை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்த இரு முஸ்லீம் பெண்களின் மனுவை அனுமதித்த தெங்கு மைமுன், 8-1 எனும் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கினார்.
நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த, சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டான் ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லியின் தீர்ப்பு மட்டுமே அதில் வேறுபட்டிருந்தது.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டு, கிளந்தானை சேர்ந்த நிக் எலின் சூரினா நிக் அப்துல் ரஷித்தும், அவரது மகள் தெங்கு யாஸ்மின் நஸ்தாஷா அப்துல் ரஹ்மானும் இணைந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 4 உட்பிரிவு 4-யின் கீழ், கிளந்தான் மாநில அரசாங்கத்தை, எதிர்மனுதாரராக குறிப்பிட்டு, கூட்டரசு நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடுத்திருந்தார்.
2019-ஆம் ஆண்டு, கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 18 குற்றங்கள் தொடர்பில் கூட்டரசு சட்டம் உள்ளதால், சம்பந்தப்பட்ட விதிகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு முரண்பாடான அந்த விதிகளை இயற்றியதன் வாயிலாக, கிளந்தான் மாநில அரசாங்கம், அதன் அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமெனவும், அந்த இரு முஸ்லீம் பெண்களும் தங்கள் மனு வாயிலாக கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.