ஜெம்போல், ஜனவரி 17 – திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததால், பெற்றோருக்கு அஞ்சி, தாம் கற்பழிக்கப்பட்டதாக போலியாக போலீஸ் புகார் செய்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவரின் செயல் அம்பலமானது.
கிகிர் போலீஸ் நிலையத்தில் அப்பெண் செய்த புகாரை தொடர்ந்து, நேற்றிரவு மணி 7.29 வாக்கில் அவர் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டார்.
புகார் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், பஹாவ், கம்போங் செர்திங் இலிரிலுள்ள, வீடொன்றில் தாம் கற்பழிக்கப்பட்டதாக அப்பெண் கூறியதாக, ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
கருப்பு நிற ஆடையும், முகக் கவசமும் அணிந்திருந்த ஆடவன் ஒருவன், வீட்டில் அத்துமீறி நுழைந்து தம்மை கற்பழித்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
அதனால், சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்ற தடயவியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அங்கு எவ்வித தடயமோ விந்தணு கறையோ இல்லை என்பதை கண்டறிந்தனர்.
அதன் பின்னர், ஜெம்பொல் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்த வேளை ; அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதும் அம்பலமானதாக ஹோ சொன்னார்.
அதோடு, அப்பெண்ணின் கைப்பேசியை சோதனையிட்ட போது, காதலருடன் அப்பெண் பேசிய உரையாடல் பதிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெற்றோருக்கு அஞ்சி கர்ப்பத்தை மறைக்க தாம் பொய்யான போலீஸ் புகார் செய்ததை அவர் ஒப்புக் கொண்டதை ஹோ உறுதிப்படுத்தினார்.
அதனால், அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 182-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.