கோலாலம்பூர், டிச 4- புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வாய்ப்புக்கான நல்ல செய்தி கிடைக்கும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் நல்ல செய்தி காத்திருப்பதாகவும் புதிய சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அல்லது அரசாங்க தலைமை செயலாளர் முகமட் சுகி அலி அறிவிக்கக்கூடும் என பாமி பாட்சில் கூறினார்.
அரசாங்க சேவையில் இன்னமும் இருப்போருக்கு புதிய சம்பள திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை நாங்கள் அங்கீகரித்து விட்டோம். 2024ஆம் ஆண்டு முதல் இந்த புதிய சம்பளத் திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என அவர் கூறினார். சம்பள உயர்வு குறித்து ஏற்கனவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் கோடி காட்டியிருப்பதால் அரசு ஊழியர்கள் நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என பாமி பாட்சில் தெரிவித்தார்.