புத்ரா ஜெயா, ஜன 6 – 60 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் லஞ்சம் பெற முயன்றது மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பில் காற்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இரண்டு ஆலோசகர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். 40 மற்றும் 60 வயதுடைய அந்த நால்வரும் வியாழக்கிழமை மாலையில் கெடா MACC அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்க வந்த போது கைது செய்யப்பட்டனர். லஞ்சப் பணம் காற்பந்து கிளப்பின் கணக்கின் வரவில் வைக்கப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவருவதாக MACC-க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
ஒரு நிறுவன உரிமையாளருக்கு ஒரு திட்டத்திற்கான டெண்டரைப் பெறுவதற்கும், ஒரு மாநிலத்தில் ஐந்து நீர்த்தேக்கங்களை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் இந்த பணம் ஒரு ‘வெகுமதி’ என்று நம்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளையும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடுத்து வைப்பதற்காக மாஜிஸ்திரேட் சிதி நோர்ஹிடயா முகமட் நூரிடம் MACC வழக்கறிஞர்கள் அனுமதி பெற்றனர்.