லாஸ் ஏஞ்சல்ஸ், பிப் 6 – அமெரிக்காவில், கலிபோர்னியாவில் மேற்கு கரையில் “Pineapple Express” புயல் வீசியதைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு, மற்றும் மின் விநியோக பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்துவரும் கடுமையான மழையினால் பல இடங்களில் சகதியும் வெள்ளமும் ஏற்பட்டன. அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் இவ்வார பிற்பகுதியில் கடுமையாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் வீசியது முதல் பனிப்பொழிவும் அதிகரித்து வருவதால் சாலைகளில் வழக்கத்தைவிட அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக கலிபோர்னியாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சுமார் 35 மில்லியன் மக்கள் வசிக்கும் கலிபோர்னியாவில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் மத்திய கரைப் பகுதியில் புயலினால் ஏற்பட்ட மின் விநியோகம் துண்டிப்பினால் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.