பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 7 – ஆட்டிசம் குறைபாடு உடைய ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யானின் மரணம் தொடர்பில், விரைவில் அவனது பெற்றோரின் வாக்குமூலத்தை போலீஸ் பதிவுச் செய்யும்.
அதே சமயம், விசாரணைக்காக அவனது அண்டை வீட்டுக்காரர்கள், சாட்சியாளர்கள் ஆகியோரின் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படுமென, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
இதுவரை, அந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை போலீஸ் திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளது.
இன்று காலை அச்சிறுவனின் சடலம் மீது, சுங்கை பூலோ மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், சவப்பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
தலைநகர், டாமான்சாரா டாமாயை சேர்ந்த அச்சிறுவன், நேற்று முன்தினம் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட வேளை; நேற்றிரவு மணி பத்து வாக்கில், அவனது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆற்றோரத்திலிருந்து, சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.