சிங்கப்பூர், டிச 30 – ஆசை ஆசையாய் தனது மனைவியை ஜோகூருக்கு தேநிலவுக்கு அழைத்து வந்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு மிஞ்சியது அதிர்ச்சி மட்டுமே.
அகோடாவில் 200 ரிங்கிட்டுக்கு அந்த ஆடவர், ஜோகூர் லேகோலேண்ட் அருகே ஹோம்ஸ்தேய் ‘ Homestay’ ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நாளன்று தன் மனைவியுடன் அங்கு வந்த போது, அஞ்சல் பெட்டியில் ஹோம்ஸ்தேயிக்கான சாவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தனது சோகக் கதையை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
சாவிக்குப் பதில் சில கடிதங்கள் மட்டுமே அங்கு இருந்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தாம் முன்பதிவு செய்திருந்த வீடு புலன்விசாரணையின் கீழ் இருப்பதை அப்போது தான் அவர் தெரிந்துகொண்டதாகவும் அப்படிப்பட்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க அகோடா எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் தமது டிக்டாக் பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இவரின் பதிவைத் தொடர்ந்து பலரும் இவருக்கு ஆறுதலுடன், இச்சம்பவம் குறித்து கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்