ஈப்போ, டிச 18 – பேரா மாநிலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவை முன்னிட்டு அதன் ஆலய வளாகத்தில் கடைகளுக்கான ஏலம் நேற்று விடப்பட்டது.
இந்த ஆண்டும் ஆலய வளாகத்தில் கடைகள் அமைக்க வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளது என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் செயலாளர் வி.மு. தியாகராஜன் தெரிவித்தார். ஆலய வளாகத்தில் மட்டும் 80 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 65 கடைகள் மட்டுமே வணிகர்கள் பெற்றுள்ளனர்
எஞ்சிய 15 கடைகள் காலியாக உள்ளது. அதில் வியாபாரம் நடத்த ஆர்வம் உள்ளவர்கள் தேவஸ்தான பொறுப்பாளர்களிடம் தொடர்புக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். ஆலயத்திற்கு வெளிப்புறம் ஈப்போ மாநகர் மன்றம் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 180 கடைகள் அமைக்கப்படும். இதில் 100 கடைகள் கோரப்பட்டுள்ளது. மேலும் 80 கடைகள் காலியாக உள்ளன. அதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தியாகராஜன் கூறினார். அடுத்த மாதம் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆலய தைப்பூச விழாவில் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்ப்பதாகவும், பால் குடம் ஏந்தி வரும் பக்தர்கள் இடையூறுகள் இன்றி முருகனுக்கு நடைபெறும் பாலபிஷேகத்தை கண்டு களிக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.