மஞ்சோங், மார்ச் 8 – பேராக், மஞ்சோங் நகராண்மைக் கழக ஊழியர் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், இரு சகோதரர்களுக்கு எதிராக இன்று மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், 43 வயது எம்.சரவணன் மற்றும் 48 வயது எம்.தமிழ்ச்செல்வம் ஆகிய அவ்விருவரிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
பிப்ரவரி பத்தாம் தேதி, அதிகாலை மணி ஐந்துக்கும், இரவு மணி ஒன்பதுக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஆயிர் தாவார், தாமான் பிருவிலுள்ள வீடொன்றில், 45 வயது எம்.சேகரை கொலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அவ்விருவரையும்ஜாமினில் விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இரசாயனத் துறை அறிக்கை மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதால், இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.