Latestமலேசியா

பொதுப் போக்குவரத்தில், முகக் கவசம் ஊக்குவிக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை; கூறுகிறார் லோக்

கோலாலம்பூர், டிசம்பர் 19 – பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகள், தற்சமயம் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், அதனை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சமீப காலமாக, நாட்டில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த ஒரு பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தினாலும் பொதுமக்கள், முகக் கவசம் அணிய ஊக்குவிக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக் தெரிவித்தார்.

எனினும், முகக் கவசம் அணிவது மீதான கொள்கை அல்லது விதிமுறைகளை நிர்ணயிக்கும் முழு அதிகாரம் சுகாதார அமைச்சை சார்ந்தது என்பதால், அது தொடர்பில் போக்குவரத்து சொந்த கொள்கை எதையும் நிர்ணயிக்காது என லோக் தெளிவுப்படுத்தினார்.

நாட்டில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கோவிட்-19 நிர்வாக திட்டத்தை தொடர்ந்து, தற்சமயம் உள்ள சுகாதார வசதிகளுக்கு அது சுமையை ஏற்படுத்தவில்லை எனவும் நேற்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் கூறியிருந்தார்.

அதே சமயம், கோவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் போது, நாட்டில் மீண்டும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை எனவும் ஜுல்கிப்ளி சொன்னார்.

டிசம்பர் 10 முதல் 16-ஆம் தேதி வரையிலான, 50-வது தொற்றுநோயியல் வாரத்தில், நாட்டில் மொத்தம் 20 ஆயிரத்து 696 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளை ; அந்த எண்ணிக்கை 49-வது வாரத்தில் பதிவுச் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 757 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 62.2 விழுக்காடு அதிகமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!